இந்தோனீசியாவில் தடுப்பூசி
போடும் பணி தொடங்கியது
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் குறிப்பிட்ட ஒரு தொகுப்பை பயன்படுத்த அந்நாட்டின் உணவு, மருந்து முகவை தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் அந்தத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இம்மாத முற்பகுதியில் அந்தத் தொகுப்பிலிருந்து தடுப்பூசி போட்ட ஓர் இளையர் மரணமடைந்தார். இதையடுத்து ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி தொகுப்பின் தரம் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக முகவை கூறியுள்ளது.
விதிமீறல்; இந்தோனீசிய
சமய போதகருக்குச் சிறை
ஜகார்த்தா: இந்தோனீசியாவுக்கு கடந்த ஆண்டு திரும்பிய முஸ்லிம் சமய போதகரான ரிஸியக் ஷிஹாப்புக்கு கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறியதற்காக நேற்று எட்டு மாதம் சிறைத் தண்டனை, இருபது மில்லியன் ரூப்யா (S$1.840) அபராதம் விதிக்கப்பட்டது.
மலேசியா; மேலும் 12.8 மில்லியன்
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி
கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், கூடுதலாக 12.8 மில்லியன் முறை போடக்கூடிய ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை தருவிக்க முடிவு செய்துள்ளது. தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவியல் அமைச்சர் கைரி ஜமாலூதீன் தெரிவித்தார்.
தற்போது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்று விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

