யங்கூன்: மியன்மாரில் சீனாவின் தொழிற் சாலைகளுக்கு தீ மூட்டிய 28 பேருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் பதற்றமான சூழ்நிலையில் யங்கூனில் சீனாவின் உதவியுடன் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு ராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் தீ வைத்தனர்.
மியன்மாரின் மிகப்பெரிய நகரமான ஹிலைங் தர்யாரில் உள்ள காலணி, ஆடைகளைத் தயாரிக்கும் வசதிகளை குற்றவாளிகள் குறி வைத்ததாக ராணுவத்தின் ஊடகமான 'மியவாடி' தெரிவித்தது.
ராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் மாண்டனர். பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து ராணுவச் சட்டம் அமலாக்கப்பட்டது.
இந்த நிலையில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்ட சம்பவத்தில் சீனர்கள் பலர் சிக்கி காயம் அடைந்ததாக மியன்மாரில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.
சீனாவின் சொத்துகளையும் குடிமக்களையும் பாதுகாக்குமாறு சீன அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்தனர்.
ஏறக்குறைய சீனாவின் முதலீட்டில் செயல்படும் 32 தொழிற்சாலைகள் நாசமாக்கப்பட்டன. இதனால் 240 மில்லியன் யுவான் (S$50 மில்லியன்) இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் மார்ச்சில் தெரிவித்தது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்த ராணுவத்துக்கு சீனா ஆதரவாக இருந்து வருவதாக மியன்மார் மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே சீனாவின் தொழிற்சாலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

