நியூசிலாந்தில் கிட்டத்தட்ட இரு மாதங்கள் தலைமறைவாக இருந்த 32 வயது குற்றவாளி ஒருவர், தமது சொந்த செலவில் தனி ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து போலிசாரிடம் கடந்த வியாழக்கிழமை (மே 27) சரணடைந்தார்.
நீதிமன்ற உத்தரவின் காரணமாக அந்த ஆடவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அவர், நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள கிராமப்புறப் பகுதியில் 58 நாள்களாக தலைமறைவாக இருந்ததாக அவரது வழக்கறிஞர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்நிலையில், அந்தக் குற்றவாளி போலிசிடம் சரணடையவிருப்பதாக வெளியான செய்தியைக் கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட போலிஸ் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்கள் அவரது வருகைக்காக காத்திருந்தனர்.
போலிசிடம் அவர் சரணடைந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தாம் தலைமறைவாக இருந்தபோது தாம் செய்த நடவடிக்கைகள் குறித்து அந்தக் குற்றவாளி பகிர்ந்துகொண்டார்.
“அந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. நான் நிறைய யோகா பயிற்சி செய்தேன். எனது உடற்கட்டில் அது வெளிப்படாது. ஆனால், நான் நிறைய யோகா பயிற்சி செய்தேன்,” என்று அவர் சொன்னார்.
தாம் ஒளிந்திருந்த இடம் ஒரு காட்டுப்பகுதி என்றும் அவர் கூறினார்.
தாம் அதிகாரிகளிடம் சரணடைய அவர் முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
தம்மை “ஆபத்தனாவன்”, “தேடப்பட்டு வரும் குற்றவாளி” என்று வர்ணிக்கும் வகையில் உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் படித்த பிறகு தாம் சரணடைய முடிவெடுத்ததாக அவர் பதிலளித்தார்.
வெளியில் யார் கண்ணிலாவது தாம் பட்டுவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுவிடும் என்பதற்காக தமது சொந்த செலவில் தனி ஹெலிகாப்டரில் ஏறி அதிகாரிகளிடம் சரணடைய தாம் திட்டமிட்டதாக அவர் சொன்னார்.
அந்த ஆடவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.