கோலாலம்பூர்: மலேசியாவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இரண்டுவார கால முடக்க உத்தரவின்போது பெரும்பாலான கடைத்தொகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் 17 முக்கிய துறைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறினார்.
அத்தியாவசிய உற்பத்தி தொழிற்சாலைகள் 60 விழுக்காட்டு கொள்திறனுடன் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவு, பான வர்த்தகம் (வாங்கிச் செல்வது மட்டும்), போக்கு
வரத்து, வங்கி, ஊடகங்கள், தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவை உள்ளிட்டவை செயல்படும்.
அனுமதிக்கப்பட்ட துறைகளும் காலை எட்டு முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே இயங்கும்.
தங்களது வீடு இருக்கும் பகுதியில் இருந்து 10 கி.மீ. சுற்றளவிற்குள் சென்று வருவதற்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும்.
"ஊரடங்கு கிடையாது, ஆனால் யாரும் வெளியே வரமாட்டார்கள் என்று நம்புகிறேன், ஏனெனில் இரவு 8 மணிக்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் எதுவும் இருக்காது," என்று இஸ்மாயில் கூறினார். பெரும்பாலான பொருளாதார துறைகளை மூடுவதால் வேலைக்காக வெளியே செல்பவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனிலிருந்து 1.5 மில்லியனாகக் குறையும் என்றும் அவர் கூறினார்.

