பெய்ஜிங்: கிருமித்தொற்றால் பல உலக நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிக் கிடக்கும் நிலையில், கொரோனா கிருமி முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நடவடிக்கைகள் வழக்கம் போல் இயங்கி வந்தன.
ஆனால் திடீரென்று நேற்று முன்தினம் அங்கு 27 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொற்றுக்கு ஆளானவர்களில் 7 பேர் மட்டுமே வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். மற்ற 20 சம்பவங்களும் உள்ளூர் கிருமிப் பரவாலாகும்.
சீனாவின் குவாங்டாங் மாநிலத்தின் குவாங்சோ நகரத்தில் 18 பேரும், ஃபோஷன் நகரத்தில் இரண்டு பேரும் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அம்மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் குறிப்பிட்ட ஐந்து தெருக்களில் வசிப்பவர்களை வீட்டிலேயே இருக்கும்படி மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதோடு பொழுதுபோக்கு இடங்களும் சந்தைகளும் மூடப்பட்டன.
அண்மைய கிருமித்தொற்று சம்பவங்கள் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கிருமி வகையைச் சேர்ந்தது என்று நகரின் நகராட்சி சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார்.
இதையடுத்து குவாங்சோ அனைத்துலக விமானநிலையத்தில் சுமார் 519 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
உலகளாவிய தொற்றுநோய் பரவலுக்கு மத்தியிலும் உலகின் பரபரப்பான விமான நிலையமாக செயல்பட்டு வந்த குவாங்சோ விமான நிலையம் கடந்த ஆண்டு சுமார் 43.8 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.

