இந்தியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட புதுவகை கொரோனா கிருமிக்கு மறுபெயர் சூட்டப்பட்டிருப்பது, சமூகத்தில் மற்றவர்கள் தங்களை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பது குறையும் என்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கிருமி வகை, “இந்திய வகை கிருமி” என்று மற்ற நாடுகளில் வர்ணிக்கப்பட்டு வந்தது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் மாற்றம் காணப்பட்டுள்ள அது, இப்போது “டெல்ட்டா” வகை என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஓராண்டு காலமாக மருத்துவராகப் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், தாம் ஓர் இந்தியர் என்பதால் தம்மை அணுகுவது குறித்து மற்றவர்கள் தயங்குகிறார்கள் என்ற சிந்தனை அண்மைய மாதங்களில் தமக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெள்ளை இனத்தவர் ஒருவர், தமக்கு 30களில் இருக்கும் அந்த மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். கிழக்கு அல்லது தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து, மற்ற மருத்துவர்களே தமக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்த நோயாளி தீர்மானமாக இருந்தார்.
“இந்தச் சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினம், எனது வேலையிலேயே மோசமான தினம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவர் வருத்தத்துடன் கூறினார்.
“அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், கொவிட்-19 நோயை சீன நாட்டவர்களுடன் தொடர்புபடுத்தியதை அடுத்து, ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்தன. இப்போது, இந்திய வகை கிருமி என்று அழைக்கப்படும் கிருமி உருவெடுத்திருப்பதைத் தொடர்ந்து, என்னைப் போன்ற பலரும் தவறான கண்ணோட்டத்திற்கு இலக்காகியுள்ளனர்,” என்றார் அந்த மருத்துவர்.