அமெரிக்க விமானம் ஒன்றில் பயணி ஒருவர் திடீரென விமானி அறையை நோக்கி ஓடியதால் பதற்றம் எழுந்தது.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து நேஷ்வில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த டெல்டா ஏர் விமானத்தில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்தப் பயணி விமானி அறையை நோக்கி விரைந்து சென்றதைக் கவனித்த மற்றொரு பயணியும் விமான ஊழியர்களும் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர் ‘விமானத்தை நிறுத்து’ என்று திரும்பத் திரும்பத் கத்தினார். கைபேசி ஒன்றில் பதிவு செய்யப்பட்ட காணொளி இதனைக் காட்டியது.
இந்தத் திடீர் சம்பவம் காரணமாக விமானம் நியூ மெக்சிகோவில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.
தகராறு செய்த பயணி, கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டார்.
“என்னவாயிற்று என்று தெரியவில்லை. திடீரென்று எழுந்தார். விமானி அறையை நோக்கி வேகமாகச் சென்றார். அந்த அறையின் கதவைப் பலமாகத் தட்டினார்,” என பெயர் குறிப்பிட விரும்பாத பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.