கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கை குறித்து சிலாங்கூர் மன்னர்
கோலாலம்பூர்: மலேசியாவில் தினமும் ஆக அதிகமான கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வரும் மாநிலமாக சிலாங்கூர் இருக்க, இதுவரை 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே அவர்களின் முதல் தடுப்பூசி போடப்படுவதற்கான தடுப்பூசி அளவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிலாங்கூர் மன்னர் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக சிலாங்கூர் மக்களுக்கு 2.9 மி. தடுப்பூசி அளவு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது என்றும் மாநிலத்துக்கு 615,210 தடுப்பூசி அளவே இதுவரை கிடைத்துள்ளது என்றும் கூறி இது தமக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் நேற்று கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் மக்கள்தொகை 6.5 மி. அதற்கேற்பத் தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கை, அதிகம் சமமற்றதாக உள்ளதெனக் கூறியதுடன் இது 'நியாயமில்லை' என்றார் மன்னர்.
மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சிலாங்கூர் மாநிலம் ஆக அதிக பங்களிப்பதை மன்னர் நினைவூட்ட விரும்புவதாக அவரின் அறிக்கையை வெளியிட்ட அந்தரங்கச் செயலாளர் முகம்மது முனிர் பானி குறிப்பிட்டார்.
முன்னர் அறிவிக்கப்பட்ட 2.9 மில்லியன் தடுப்பூசி அளவுகள், சிலாங்கூரில் உள்ள அரசாங்க வளாகம் மற்றும் விநியோகக் கிடங்கில் உள்ள இருப்பின் எண்ணிக்கை. இவையே பின்னர் நாடளாவிய விநியோகம் செய்யப்படும் என்று மலேசிய கொவிட்-19 தடுப்பூசிப் பணிக்குழு கடந்த சனிக்கிழமையன்று தெளிவுபடுத்தியது.
மலேசியாவில் நேற்று பதிவான 5,566 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் சிலாங்கூரில் உறுதியானவை 1,524. மலேசியாவின் மொத்த கிருமி பாதிப்பு எண்ணிக்கை 627,652ஐ எட்டியுள்ளது.
சிலாங்கூர் கிருமி நிலவரம் குறித்து கவலை தெரிவித்த சுல்தான் ஷரஃபுதீன், மாநில மக்களுக்காக கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க வழி செய்யுமாறு கோரினார். மாநிலத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் மேலும் அதிகத் தடுப்பூசி நிலையங்கள் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தடுப்பூசிகள் உயிரைக் காக்கும் என்பதையும் மாநில மக்களுக்கு சுல்தான் ஷரஃபுதீன் அறிவுறுத்தினார்.

