தாதியர்கள் வேலை நிறுத்தம்
நியூசிலாந்து: நியூசிலாந்தில் சுமார் 30,000 தாதியர்கள் நேற்று எட்டு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வு மற்றும் வேலைச் சூழல் ஆகியவை குறித்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட சுகாதார கழகம் இவ்வார தொடக்கத்தில் முன்மொழிந்த 1.4 விழுக்காடு சம்பள உயர்வை தாதியர் அமைப்பு நிராகரித்துவிட்டது. அதேசமயம் அந்த அமைப்பு கேட்கும் 17% சம்பள உயர்வு சாத்தியமில்லாத ஒன்று என்றும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்வு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இன்று இரவு முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பயண, ஒன்று கூடல்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மக்கள் தங்களுடைய வீட்டிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சென்றுவர முடியும். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மெல்பர்னில் கடந்த இரண்டு வாரமாக கடுமையான முடக்க உத்தரவு நடப்பில் இருந்தது.
பட்டினிச் சாவு: ஐநா எச்சரிக்கை
யங்கூன்: தாய்லாந்தின் எல்லையையொட்டியுள்ள மியன்
மாரின் கயா மாநிலத்தில் மக்கள் பட்டினியாலும் நோயாலும் பெருமளவு உயிரிழக்கக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
"ராணுவ ஆட்சிக்குழுவின் மிருகத்தனமான, கண்மூடித் தனமான தாக்குதல்கள் கயா மாநில மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. உடனடியாக எதுவும் செய்யாவிட்டால், பட்டினியாலும் நோயாலும் அங்கு பெருமளவில் மக்கள் செத்து மடிவார்கள்," என்று மியன்மார் மனித உரிமைகள் தொடர்பான ஐநா சிறப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை கொள்கை மசோதா
வாஷிங்டன்: தொழில்துறை கொள்கையுடன் கூடிய மசோ
தாவை அமெரிக்க செனட் சபை பெரும்பான்மை வாக்கு
களுடன் நிறைவேற்றியுள்ளது. சீனாவால் அதிகரித்து வரும் தொழில்நுட்ப அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
அமெரிக்காவின் தொழில்நுட்பம், ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்கான இந்த மசோதா சுமார் 190 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இது தனியார் நிறுவனங்களுக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான பிணைப்பை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

