மும்பை: 2007ஆம் ஆண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி மகுடம் சூடியது.
அதற்கு முன்பு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. அதன்பின் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் மூத்த வீரர்
களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.
அணித் தலைவராக டோனி முதல்முறையாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமைதாங்கும் எதிர்பார்ப்புடன் தாம் ஆவலுடன் இருந்ததாக முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
"2007ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியதால் இந்திய ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும் தென்னாப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.
"அதன்பின்னர் டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றது. வெளிநாடுகளில் நான்கு மாத சுற்றுப்பயணம் இருந்தது. எனவே மூத்த வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் டி20 உலகக் கிண்ணத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
"அப்போட்டியில் இந்திய அணிக்கு நான் தலைவராக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி அணித் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அணித் தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதைத்தான் நானும் செய்தேன்," என்றார் யுவராஜ் சிங்.
2007ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியதற்கு யுவராஜ் சிங் முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில்தான் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர்களை அடித்து யுவராஜ் சிங் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.