கோலாலம்பூர்: எரிசக்தி, சமையல் எண்ணெய் மானியத்துக்காக மலேசியா இவ்வாண்டு 8 பில்லியன் ரிங்கிட் ($2.58 பில்லியன்) ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான தொகையைவிட இது இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்று மலேசிய நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க மலேசியாவில் இம்மாதம் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கநிலையை மலேசிய அரசு இம்மாதம் 28ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதன் காரணமாக மலேசிய மக்கள் சிரமப்படுவதாகவும் அவர்
களுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மலேசிய அரசாங்கம் கூறியது.
உலகளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் விலைகளும் அதிகரிக்க இருப்பதாக மலேசிய நிதி அமைச்சர் துங்கு ஸஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
"மக்களின் நலனைக் காக்கவும் வர்த்தகங்களுக்கு உதவிடவும் விலை ஏற்றத்தை ஈடுசெய்ய மலேசிய அரசாங்கம் மானியம் வழங்க தயாராக இருக்கிறது. விலை அதி
கரிப்பால் ஏற்படும் செலவை மலேசிய அரசாங்கம் ஏற்கவிருக்கிறது," என்றார் அவர்.
மானியங்களுக்காக மலேசிய அரசாங்கம் 2019ல் 6.32 பில்லியன் ரிங்கிட், 2020ல் 2.16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதாக திரு ஸஃப்ருல் தெரிவித்தார்.
அண்மைய காலமாக மலேசியாவில் தொடர்ந்து பலமுறை முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மக்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக $12.8 பில்லியன் உதவித் தொகையை மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் கடந்த மாதம் அறிவித்தார்.
மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று அன்றாடப் பாதிப்பும் மரணங்களும் கடந்த மாதம் உச்சத்தை எட்டியது. கடந்த சில நாட்களாக இவை குறைந்துள்ளன.
நேற்று மேலும் 5,793 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத் துறை தெரிவித்தது. இதன் மூலம் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 652,204ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் இதுவரை 3,768 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இளையர்களின் உதவி
நாடப்படுகிறது
இதற்கிடையே, கொவிட்-19 தடுப்பூசி தொடர்பாக மலேசிய மக்களிடையே நம்பிக்கையை ஏற்
படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மலேசிய தடுப்பூசி ஆதரவு தொண்டூழியர் திட்டத்தில் பங்கெ
டுக்கும்படி அந்நாட்டு இளையர்கள்
ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்தத் திட்டத்தில் பங்கெடுத்து மேலும் பல மலேசியர்களை, குறிப்பாக இளையர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்று மலேசிய இளையர் மன்றம் கேட்டுக்கொண்டது.
"கொவிட்-19 உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய் என்பதை இளையர்களுக்குப் புரியவைக்க வேண்டும். குறிப்பாக, உருமாறிய கொவிட்-19 கிருமி வகை கூடுதல் ஆபத்துமிக்கது என அவர்களுக்குத் தெரிய வேண்டும்," என்று மலேசிய இளையர் மன்றத்தின் தலைவர் திரு ஜுவித்ரி ஜோஹா தெரிவித்தார்.

