மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ்க் குடும்பத்துக்காக ஆஸ்திரேலியர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடேசலிங்கம் முருகப்பன்-கோகிலாபத்மபிரியா தம்பதியரும் அவர்களது இரு மகள்களான தர்ணிக்காவும் கோபிகாவும் பல ஆண்டுகளாக அகதிகள் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த இரண்டு சிறுமிகளும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். நடேசலிங்கமும் கோகிலாபத்மபிரியாவும் இலங்கையிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்கு பயண ஆவணங்கள் ஏதும் இன்றி வந்தவர்கள்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்தக் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்ப ஆஸ்திரேலியா முடிவு செய்தது.
இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்களை இலங்கைக்கு அனுப்பாமல் இருக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கிறஸ்மஸ் தீவில் இந்தக் குடும்பம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடேசலிங்கம்-கோகிலாபத்மபிரியா தம்பதியரின் இளைய மகளான 4 வயது தர்ணிக்காவுக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ரத்த தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு பெர்த் சிறார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் இருக்க அவரது தாயாருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தையும் சகோதரியும் தடுப்பு மையத்தில் உள்ளனர். இந்நிலையில், நடேசலிங்கத்தின் குடும்பத்தை மீண்டும் ஆஸ்திலேயாவுக்கு அழைத்து வரவும் அவர்களை இலங்கைக்கு அனுப்பாமல் நல்லதொரு தீர்வைக் காணவும் மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலியர்கள் பலர் நேற்று பேரணி நடத்தி குரல் எழுப்பினர்

