கொழும்பு: இலங்கை தனது மேற்கு கடற்கரையில் வரலாறு காணாத மாசு ஏற்படுத்தியதற்காக கப்பல் நிறுவனத்திடம் 40 மில்லியன் டாலர் (S$53 மில்லியன்) இழப்பீடு கோரியுள்ளது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ என்னும் சரக்குக் கப்பல் இலங்கைக் கடற்பகுதி யில் தீப்பிடித்து எரிந்தது.
கிட்டத்தட்ட இரு வாரங்களாக தீயில் கருகிய அக்கப்பல் இம்மாதம் 2ஆம் தேதி கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. கப்பலில் இருந்த டன் கணக்கான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் எரிந்ததன் காரணமாக கடலோரத்தில் ஏராளமான பிளாஸ்டிக் துகள்கள் ஒதுங்கின.
கடற்கரையை நீண்டதூரம் சுத்தப்படுத்துவது இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இதனால் தனது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அந்தக் கப்பலின் உரிமையாளரான ‘எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ்’ நிறுவனத்திடம் இலங்கை இழப்பீடு கோரியுள்ளது.
இதற்கான கோரிக்கையை இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபயகுணவர்த்தன கப்பல் நிறுவனத்துக்கு அனுப்பி உள்ளார்.
“இழப்பீட்டுத் தொகையுடன் கப்பல் தீயை அணைப்பதற்காக நாங்கள் செய்த செலவையும் அந்த நிறுவனத்திடம் கேட்போம்,” என்றார் அவர்.
கப்பல் எரிந்த சம்பவம் கடல்துறை பொருளியலுக்கு ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து ஆராய ஆஸ்திரேலியாவை இலங்கை நாடியுள்ளது. இந்தப் பேரிடர் காரணமாக பல வாரங்களாக மீன்பிடி தொழில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல்துறை பொருளியலுக்கு முக்கியமாகக் கைகொடுத்து வரும் முக்கிய தொழில் இது.