மலேசியாவில் 1.33 மில்லியன் பேர்
இரு தடுப்பூசிகளையும் போட்டனர்
கோலாலம்பூர்: மலேசியாவில் சனிக்கிழமை வரை 1.33 மில்லியன் பேர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு விட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா நேற்று கூறினார். இவர்கள் தவிர 3.03 மில்லியன் மக்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மொத்தமாக 4.36 மில்லியன் மக்கள் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார். சிலாங்கூர், சரவாக், பேராக், ஜோகூர், கோலாலம்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிகமான மக்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 133,804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் இவர்களில் 100,360 பேர் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் டாக்டர் ஆதம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை வீழ்த்திய பெல்ஜியம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: யூரோ 2020 'பி' பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வென்றது. மூன்று கோல்களில் இரண்டை அக்குழுவின் நட்சத்திரமான ரோமேலு லுக்காக்கு போட்டார். மற்றொரு கோலை தாமஸ் முனியேர் போட்டார்.
அஸர்பைஜனில் நடந்த 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் குழுவும் சுவிட்சர்லாந்து குழுவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொண்டன. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரீல் எம்போலோ கோல் போட்டார். 74வது நிமிடத்தில் வேல்ஸின் கிஃபர் மூர் சமநிலை கோலைப் போட்டு, தமது குழுவைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

