ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவில் கடந்த வாரம் தொற்றுச் சம்பவங்கள் 50 விழுக்காடு அதிகரித்தன.
அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா கிருமியே இதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலை நீடித்தால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வெடான் எச்சரித்துள்ளார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஜகார்த்தாவில் 17,500 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
கடந்த ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 11,500ஆக இருந்தது.
"தலைநகரில் கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். தற்போதைய சூழ்நிலை கை மீறிப் போனால் அவசரகால கட்டத்தில் நுழைய வேண்டியிருக்கும். செப்டம்பர், பிப்ரவரியில் அமலாக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை தற்போது எடுத்தாக வேண்டும்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் திரு அனிஸ் தெரிவித்தார்.
உருமாறிய டெல்டா கிருமி, முதல் முறையாக இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது.
இந்தோனீசியாவின் பல நகரங்களில் இந்த வகை கிருமியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜகார்த்தா, மத்திய ஜாவாவில் குடுஸ் போன்ற இடங்களில் டெல்டா கிருமித்தொற்று பரவி வரு வதாக பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன்னார்.
இதற்கிடையே குடுஸில் சேகரிக்கப்பட்ட 34 மாதிரிகளின் மரபணு வரிசையை ஆராய்ந்ததில் அவற்றில் 28 டெல்டா கிருமி என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் சிட்டி நடியா டர்மிஸி தெரிவித்தார்.
ஆனால் அது பற்றி அவர் விவரிக்கவில்லை.
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவமனை படுக்கைகளும் 75 விழுக்காடு அதிகரித்துள்ளன.
கிருமித்தொற்று சம்பவங்களில் நான்கில் ஒன்று ஜகார்த்தாவில் பதிவாகியுள்ளது. ஆனால் அவர்கள் ஜகார்த்தாவுக்கு வெளியே இருந்து வந்தவர்கள். ஜகார்த்தாவைச் சுற்றியுள்ள துணை நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
ஜகார்த்தாவில் மற்றொரு கிருமிப் பரவல் அலை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களை அனிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது சில வரம்புகளுடன் உணவகங்களில் உணவு உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசியமற்ற ஊழியர்களில் ஒரு பகுதியினர் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

