ஜெருசலம்: இஸ்ரேலில் நெட்டன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக நஃப்டாலி பென்னட் பொறுப்பு ஏற்றுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எட்டுக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி (60-59) மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் முறையாக இந்தக் கூட்டணியில் அரபு கட்சி ஒன்றும் இடம் ெபற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் திரு பென்னட் பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு பேசிய 71 வயது திரு நெட்டன்யாகு, ஆட்சியைக் கவிழ்க்கும் வரை நாங்கள் எதிர்க்கட்சியாக தலைநிமிர்ந்து நிற்போம் என்று கூறியுள்ளார்.
மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணி அமைக்கப்பட்டது. பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொள்கை, உள்நாட்டு சீர்திருத்தம் ஆகியவற்றை முன்வைத்து கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.
ஆனால் ஆட்சி மாற்றத்தால் இஸ்ரேலின் பாலஸ்தீன கொள்கை யில் மாற்றமிருக்காது என்று பாலஸ்தீன நிர்வாகத்தினர் நம்புகின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை இணைக்க வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புத் தலைவருமான திரு பென்னட் வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் பாலஸ்தீன விவகாரத்தில் நெட்டன்யாகுவின் லிக்குட் கட்சி வழியையே அவர் பின்பற்றுவார் என்று பாலஸ்தீன நிர்வாகம் கணித்துள்ளது.
இஸ்ரேலின் நீண்டகாலப் பிரதமரான நெட்டன்யாகு 2009ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்துள்ளார்.
இதற்கு முன்பு 1996 முதல் 1999 வரையில் முதல் தவணைக் காலத்திலும் அவர் பிரதமராக இருந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நான்கு தேர்தல்களிலும் அவரது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் அவரது கட்சி பலவீனமடைந்தது.
நெட்டன்யாகு மீது ஊழல் வழக்கு ஒன்றும் விசாரணையில் உள்ளது. ஆனால் எந்தவித தவறும் செய்யவில்லை என்று அவர் கூறி வருகிறார்.
புதிய கூட்டணி அரசாங்கம் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ள இணக்கம் கண்டுள்ளன.
செல்வந்தரான 49 வயது பென்னட்டுக்குப் பிறகு 2023ல் தொலைக்காட்சிப் படைப்பாளரான 57 வயது யயிர் லாபிட் பிரதமர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

