பிரிஸ்பேன்: மக்கள் கொடுத்த நெருக்கத்தைத் தொடர்ந்து தீவு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட, அடைக்கலம் நாடும் தமிழ் குடும்பத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் விடுவித்து உள்ளது.
அடைக்கலம் நாடி ஆஸ்திரேலி யாவுக்கு வந்த பிரியா-நடேஸ் குடும்பம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதை எதிர்த்துப் போராடி வந்தது.
அதனைத் தொடர்ந்து 2019 ஆகஸ்ட் முதல் தொலைதூர கிறிஸ்மஸ் தீவில் உள்ள குடி
நுழைவு தடுப்பு முகாமில் நால்வரைக் கொண்ட அந்தக் குடும்பம் தடுத்து வைக்கப்பட்டது.
நடேஸ் முருகப்பன், அவரது மனைவி பிரியா, இவ்விருவருக்கும் ஆஸ்திரேலியாவில் பிறந்த கோபிகா, தருணிகா ஆகியோரில் நான்கு வயது தருணிகாவின் உடல்நிலை கடந்த வாரம் பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள ஒரு மருத்துவ
மனைக்கு வான்வழியாக அச்சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.
ரத்தத் தொற்றுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தினரையும் பெர்த் நகருக்கு அனுப்பக் கோரி குவீன்ஸ்லாந்தில் உள்ள சிறு நகரான பிலோயெலாவில் உள்ள அண்டை வீட்டார், பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்குமாறு குரல் எழுப்பினர். அதற்குப் பேராதரவு கிட்டியது.
குறிப்பாக, ஆஸ்திரேலிய ஆளும் கூட்டணியிலிருந்தே அரசாங்கத்திற்கு நெருக்குதல் வரத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து அந்தக் குடும்பம் பெர்த் நகரில் குடியேற அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலிய குடிநுழைவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் திங்கட்கிழமை அறிவித்தார்.

