மலேசியாவில் தொற்று 5,419
புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று புதிதாக 5,419 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப் பட்டோரின் மொத்த எண்ணிக்கை 667,876க்கு அதிகரித்தது. சிலாங்கூர் மாநிலத்தில்தான் நேற்று ஆக அதிகமாக 1,996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் அரசு மீது புகார்
தோக்கியோ: ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு எதிராக நேற்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் சமர்ப்பித்து உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
பல்வேறு அம்சங்களில் மக்களின் நம்பிக்கையை ஜப்பானிய அரசாங்கம் இழந்துவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையைக் காக்க அரசு தவறிவிட்டதாக அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ எடானோ தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் புகார்
ஜெனிவா: பங்ளாதேஷில் அடைக்கலம் புகுந்த 800,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகளிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு முறையற்ற வகையில் தகவல்களைத் திரட்டி மியன்மார் அரசாங்கத்துக்கு அனுப்பியதாக மனித உரிமைக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் அது நேற்று வலியுறுத்தியது. ஐநா அகதிகள் முகவை கடந்த மூன்றாண்டு காலமாக ரோஹிங்யா அகதிகள் பற்றிய விவரங்களை பதிவு செய்துள்ளது. அதன் பயனாக அவர்களுக்கு பங்ளாதேஷ் அரசாங்கம் அளிக்கும் அத்தியாவசிய உதவிகளையும் சேவைகளையும் அவர்களால் பெற முடிந்தது. ஆனால், ஐநா திரட்டிய தகவல்களை பங்ளாதேஷ் அரசாங்கம் மியன்மாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அகதிகளை நாடுகடத்தும் நோக்குடன் இவ்வாறு செய்யப்பட்டதாகவும் தற்போது வெளியிடப்பட்டுள்ள மனித உரிமைக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது.

