கோலாலம்பூர்: அவசர சட்டங்கள் மற்றும் தேசிய மீட்சித் திட்டம் ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கும் வகையில் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என்று மலேசிய மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவிற்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டம் முடிவுற்ற பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள், அவசரகாலத்திற்கான சிறப்பு தன்னிச்சை குழு மற்றும் அரசாங்க வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு அறிந்த பிறகு, தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மாமன்னர் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்துவத்தை எளிமைப்
படுத்தவும், கூடிய விரைவில் கூட்டு எதிர்ப்புத் திறனைப் பெறும் வகையில் கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும் தீர்க்கமாக செயல்படவும் அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சென்ற டிசம்பரில் மலேசிய நாடாளு
மன்றம் கடைசியாக ஒன்று
கூடியது.
நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு தொடங்கியது. அதன் பிறகு மாலை 5.15 மணிவாக்கில் ஜோகூர் சுல்தான் இஸ்தானா நெகாராவில் இருந்து வெளியேறினார்.
ராணுவத் தளபதி அபெண்டி புவாங், காவல்துறை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் சட்டத்துறைத் தலைவர் வழக்கறிஞர் இத்ருஸ் ஹருண் ஆகியோர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளும் கூட்டத்திற்கு முன்பு மன்னரைச் சந்தித்தனர்.
முன்னதாக, ஜூன் 9ஆம் தேதி முதல் 18 அரசியல் தலைவர்களையும் மன்னர் சந்தித்தார்.