புடாபெஸ்ட்: யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்ட்டின் புஸ்காஸ் அரினா மைதானத்தில் அந்நாட்டை எதிர்கொண்ட ரொனால்டோவின் போர்ச்சுகல் அவருடைய இரு கோல்களையும் சேர்த்து மேலும் ஒரு கோல் போட்டு 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் ஹங்கேரியை வீழ்த்தியது.
போர்ச்சுகலின் முதல் கோலை ஆட்டத்தின் 84ஆம் நிமிடத்தில் குரேரோ என்பவர் போட அடுத்த மூன்றாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கினார் ரொனால்டோ.
இதன்மூலம் அவர் யூரோ கிண்ணப் போட்டிகளில் தனது பத்தாவது கோலைப் போட்டு, அதுவரை இந்த போட்டியில் ஒன்பது கோல் போட்டு, அதிக கோல்கள் போட்டவர் என்ற பெருமையைப் பெற்ற பிரான்ஸ் நாட்டின் மிச்செல் பிளேட்டினியின் சாதனையை பின்னுக்குத் தள்ளினார்.
இது போதாது என்று ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஹங்கேரியின் கோல்காப்பாளருக்கு போக்கு காட்டி அவரைத் தாண்டிச் சென்று தமது 2வது கோலை ஹங்கேரிக்கு எதிராகப் போட்டார்.
"ரொனால்டோ மற்ற வீரர்
களுக்கு முன்மாதிரியாக விளங்கும் வீரர், அவர் தமது குழுவுக்கு ஊக்கம் கொடுத்து செயல்பட வைப்பவர்.
"முதல் பாதி ஆட்டத்தில் அவர் கிடைத்த ஒரு வாய்ப்பை வீணடித்தபோதும் அவரை வெகுநேரம் கோல் போட விடாமல் தடுக்க முடியாது.
"அவர் எப்பொழுதும் தான் விளையாடும் ஆட்டங்களின் போக்கை நிர்ணயிப்பவர்.
"அவர் பெனால்டி வாய்ப்பை எடுக்கும்போதே கோல் போடுவார் என்பது நமக்குத் தெரியும். அவர் புதிய சாதனைகளை உருவாக்குபவர்.
"இந்த வயதிலும் அவரால் இப்படி முனைப்புடன் விளையாட முடிகிறது என்றால் அது உண்மையிலேயே சிறப்பான ஒன்று. அவர் தண்ணீரின் மேல் நடப்பதுபோல் இருக்கிறது," என்று முன்னாள் இங்கிலாந்து தாக்குதல் ஆட்டக்காரர் கிறிஸ் சட்டன் ஈடு இணையில்லா புகழாரம் சூட்டினார்.
மற்றொரு போட்டியில் சொந்த கோலால் ஃபிரான்சிடம் ஜெர்மனி 1-0 என்ற கோல்கணக்கில் தோற்றது.