லண்டன்: இங்கிலாந்தில் கடந்த மே மாதத்திலிருந்து தொற்றுச் சம்பவங்கள் 50 விழுக்காடு அதிகரித்ததற்கு அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்ட டெல்டா கிருமியே காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்டுப்பாடு களைத் தளர்த்தும் திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒத்திவைத்தார்.
பிரதமரின் முடிவுக்கு தரவுகள் ஆதாரமாக இருந்ததாக அரசாங்கம் தெரிவித்தது.
இம்மாதம் 19ஆம் தேதி கட்டுப்பாடுகளை முழுமையாக அகற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய டெல்டா கிருமி மிரட்டலாக விளங்கியது. இதை யடுத்து அதிகமானோருக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
ரியாக்ட்-1 எனும் இம்ப்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனின் கிருமிப் பரவல் ஆய்வு மே 20ஆம் தேதிக்கும் ஜூன் 7ஆம் தேதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
அதில் கிருமித்தொற்று படிப்படியாக அதிகரித்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
"இளையர்களிடையே தொற்று வேகமாகப் பரவியது. ஒவ்வொரு 11 நாட்களுக்கும் இரண்டு மடங்கு தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தன. இதுவொரு கெட்ட செய்தி என்பது தெளிவாகத் தெரிந்தது," என்று இம்ப்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனின் பேராசிரியர் டாக்டர் ஸ்டீவன் ரிலே சொன்னார்.
பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 109,000 தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.
இளம் வயதினரிடம் தடுப்பூசி போடும் பணிகளைத் துரிதப்படுத்தினால் கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று டாக்டர் ரிலே கூறினார்.
பிரிட்டனில் 50 விழுக்காடு மக்கள் தொகைக்கு மேல் இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டால் கிருமித்தொற்றின் பாதிப்பு மிதமாக இருக்கும்.
ஆனால் டெல்டா கிருமி தடுப்பூசி ஆற்றலைக் குறைத்துவிடு கிறது. இருந்தாலும் இரண்டு முறை தடுப்பூசி போடுவதால் கடுமையான பாதிப்பை தடுக்க முடியும் என்பதை முந்தைய ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
இதனை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், ஆய்வின் முடிவால் கடைசிக்கட்ட தளர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்றார்.
அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.