யங்கூன்: மியன்மாருக்கு ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறைகூவல் விடுத்திருக்கிறது.
இவ்வாண்டு பிப்ரவரியில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, நிர்வாகத்தைக் கைப்பற்றிய மியன்மார் ராணுவத்தைக் கண்டித்து ஐநா பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருவாட்டி ஆங் சான் சூச்சி உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் அமைதியாகப் போராடிவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானம் அரசியல்பூர்வமாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
"மியன்மாரில் பெரிய அளவில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பது உண்மைதான். அங்கு ராணுவம் தனது முடிவைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு குறுகி வருகிறது," என்று மியன்மாருக்கான ஐநா சிறப்புத் தூதர் கிறிஸ்டின் ஸ்ரேனர் பர்கனர், ஐநா பொதுச் சபையில் தெரிவித்தார்.
தீர்மானத்திற்கு 119 நாடுகள் ஆதரவளித்தன; பெலருஸ் மட்டும் எதிர்த்து வாக்களித்தது.
அது மியன்மாரின் உள்நாட்டு விவகாரம் என்றும் நான்காண்டுகளுக்குமுன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்மானத்தில் எந்தத் தீர்வும் குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டு, சில நாடுகள் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதனிடையே, தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியின் 76வது பிறந்தநாளை ஒட்டி, அவருடைய ஆதரவாளர்கள் தங்களது கூந்தலில் மலர்சூடியபடி, நேற்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அவர்களில் தெட் சுவே வின் என்ற ஆர்வலரும் ஒருவர். சூச்சி அம்மையார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்கொடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், "சூச்சி அம்மையார் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை," என்றார் தெட்.

