மியூனிச்: யூரோ காற்பந்துப் போட்டியில் ஜெர்மனியிடம் அடைந்த மோசமான தோல்விக்குத் தானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக போர்ச்சுகல் அணியின் பயிற்றுவிப்பாளர் ஃபெர்ணாண்டோ சான்டோஸ் கூறியுள்ளார்.
"நாங்கள் மத்திய திடல் வியூகத்தை மாற்றியமைத்தோம். ஜெர்மனியின் குண்டோகன், டோனி க்ரூஸ் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினோம்.
"ஆனால் எங்களது மத்திய திடல் ஆட்டத்தில் எப்போதுமே ஒருவர் குறைவாக இருந்ததால் நாங்கள் பின்னடைந்தது தெளிவாகத் தெரிந்தது. இது நான் அமைத்த உத்தி என்பதால் அணியின் தோல்விக்கு நானே முழு பொறுப்பாவேன்.
"அவர்களைத் தடுத்து நிறுத்தி, எங்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்றால் எங்களிடம் பிரச்சினைகள் உள்ளன என்று அர்த்தம்," என்றார் போர்ச்சுகல் பயிற்றுவிப்பாளர் சான்டோஸ்.
போட்டி முழுவதும் தற்காப்பு ஆட்டத்தில் தனது வீரர்களின் தவறுகளை சாண்டோஸ் சுட்டிக்காட்டிய போதிலும், அணியின் தோல்விக்குத் தனது வீரர்களை குறைகூற அவர் மறுத்துவிட்டார்.
போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ முதல் 15 நிமிடத்திலேயே கோல் போட்டு தனது அணிக்குப் பெற்று தந்த முன்னிலைக்கு சக வீரர்களின் இரண்டு சொந்த கோல்களால் பயன் இல்லாமல் போனது.
போர்ச்சுகலின் தற்காப்பை உடைத்து, பிற்பாதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டதால் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே 45வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வாவிற்குப் பதிலாக சான்செஸைக் களமிறக்கியதும் போர்ச்சுகலின் தோல்விக்குக் காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில் அதன் பிறகுதான் ஜெர்மனி இரண்டு கோல்களைப் போட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளும் மூன்று புள்ளி
களுடன் பிரான்சுக்கு அடுத்த இடங்களில் இருக்கின்றன.
எந்த அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்பதை புதன்கிழமை நடைபெறவுள்ள ஆட்டங்கள் முடிவு செய்யும். அன்றைய தினம் போர்ச்சுகல்-பிரான்ஸ், ஜெர்மனி-ஹங்கேரி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

