யூரோ 2020 காற்பந்து போட்டியில் இதுவரையில் ஐரோப்பிய காற்பந்தின் ஜாம்பவான்கள் புள்ளிகளை இழந்துவரும் பட்சத்தில், ஆடிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி கனியை மட்டுமே சுவைத்து வருகிறது இத்தாலிய அணி. வேல்ஸ் அணியுடன் அது நேற்று மோதிய ஆட்டத்தில், 1-0 என்ற கோல் கணக்கில் வென்று குருப் 'ஏ' பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடம் வகித்து போட்டியின் 'ரவுண்ட் ஒஃப் 16' சுற்றுக்கு முன்னேறுகிறது.
ஆட்டத்தின் ஒரே கோலை இத்தாலிய வீரர் மெத்தியோ பெசினா 39வது நிமிடத்தில் புகுத்தி தம் குழுவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
மற்ற குருப் 'ஏ' ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து குழு 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கி குழுவை வீழ்த்தியது.
நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், குருப் 'ஏ' பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கும் வேல்ஸ் அணியும் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது. சுவிட்சர்லாந்து குழுவும் வேல்ஸ் அணியை போல மூன்று ஆட்டங்களில் 4 புள்ளிகளை பெற்றிருந்தபோதும், கோல் வித்தியாசத்தில் வேல்ஸ் அணி முன்னிலையில் இருந்ததால் அது பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும், சுவிட்சர்லாந்து அணி குருப் சுற்றின் சிறந்த 3வது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. வரும் ஜூன் 26ஆம் தேதி, இத்தாலி அணி 'குருப் சி'யில் 2வது இடத்தில் இடம்பெறும் குழுவுடன் பொருதும்.

