வாஷிங்டன்: அதிவேகமாகப் பரவி உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஆபத்தான டெல்டா வகை உருமாறிய கொரோனா கிருமித்தொற்று அமெரிக்காவின் தடுப்பூசிப் பணி முழுமையடையாத மாநிலங்களில் பரவி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் 700 வட்டாரங்களில் ஹெலிக்ஸ் ஆய்வு நிறுவனம் 20,000 மாதிரிகளைக் கொண்டு செய்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் காணப்பட்ட உருமாறிய கொரோனாவான டெல்டா வகைக் கிருமி பரவியுள்ளதாக இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா கிருமி பல நாடுகளில் உருமாற்றம் பெற்று உலகை அச்சுறுத்தி வருகிறது.
இந்தக் கிருமி இப்போது அமெரிக்காவில் குறைந்த விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள மாநிலங்களை அச்சுறுத்தி வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு பரவி வரும் டெல்டா வகைக் கிருமி மேலும் உருமாற்றம் பெற்று பல்கிப் பெருகும் வாய்ப்புஉள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் கூறியது.
இந்தக் கிருமித்தொற்று பரவும் காலம் நீடித்தால், மனித அணுக்களில் எளிதாக ஊடுருவி பெருக அதிக வாய்ப்பு உள்ளது.
"அதிவேகமாகப் பரவி பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது டெல்டா வகைக் கிருமி. இந்தக் கிருமி இப்போது அமெரிக்காவிலும் பரவக் கூடும் என சந்தேகிக்கிறேன்," என்று கூறியுள்ளார் அந்த ஆய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் வில்லியம் லீ.
சாதாரண கொரோனா கிருமியைக் காட்டிலும் டெல்டா வகை உருமாறிய கொரோனாவின் பரவும் ஆற்றல் இரண்டு மடங்கு அதிகம். முன்பு பிரேசிலில் தடுப்பூசிப் பணி முடிவடைந்த வட்டாரம் ஒன்றில் 'கம்மா' வகை கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்க மக்கள் தொகையில் இதுவரை 45 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நிலையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஹெலிக்ஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை, இதுவரை மதிப்பாய்வுக்கு உட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

