ஹாங்காங்: ஹாங்காங்கில் பெய்ஜிங் அறிமுகப்படுத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் முதல் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. டோங் யிங்-கிட் என்பவர் மீதான வழக்கை தலைமை நிர்வாகி கேரி லாமால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய உயர்நீதிமன்றம் விசாரித்தது. ஓராண்டுகாலமாக பிணையின்றி சிறையில் அடைக்கப்பட்ட 24 வயது டோங் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தின்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் எதிலும் ஈடுபடவில்லை என்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் நடக்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்த வழக்கு விசாரணை அடுத்த 15 நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. வழக்கின் ஆரம்பத்தில் யாரோ புகைப்படம் எடுத்ததாகக் கூறிய நீதிபதிகளில் ஒருவரான எஸ்டர் டோ இது குறித்து போலிசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் விசாரணையை நேரில் பார்வையிட்டனர்.
இதற்கிடையே ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ள ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் கட்டுரையாளரை போலிசார் கைது செய்துள்ளனர். சீனாவைப் பற்றி லி பிங் என்ற பெயரில் 55 வயது யாங் சிங் சீ வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஊழியர்கள் கைது செய்யப்பட்ட தால் ஆப்பிள் டெய்லி இன்று மூடப் படவிருக்கிறது.

