ஹாங்காங்: ஹாங்காங் நிர்வாகத்தின் அடுத்தடுத்த நெருக்கடியால் திக்குமுக்காடிய ஆப்பிள் டெய்லி நாளிதழ் 26 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கதவை மூடியது.
புதன்கிழமை இரவிலிருந்தே ஆயிரக்கணக்கான வாசகர்கள் கடைசி இதழை வாங்குவதற்காக அலுவலகத்தின் முன்பு கூடினர்.
கைபேசி விளக்கை ஒளிரவிட்டு ஆப்பிள் டெய்லிக்கு தங்களுடைய ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தினர்.
கடைசி இதழ், சுமார் ஒரு மில்லியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. முதல் பக்கத்தில் ஆதரவாளர்களை நோக்கி ஆப்பிள் டெய்லி ஊழியர் ஒருவர் கைபேசியைக் காட்டி அசைக்கும் படம் இடம்பெற்று இருந்தது.
வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் ஆப்பிள் டெய்லி அறிவித்தது.
அந்நாளிதழின் முன்னாள் இணை வெளியீட்டாளரான சான் புய் மேன், ஊழியர்களின் பாதுகாப்பு, மனிதவள பிரச்சினைகள் காரணமாக இந்த வேதனையான முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட குறிப்பில் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் போலிசாரால் கைது செய்யப்பட்ட ஆப்பிள் டெய்லியின் முக்கிய புள்ளிகளில் சானும் ஒருவர்.
அந்த நாளிதழின் தீவிர ஆதரவாளரான சான் டிசாங், ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது என்றார்.
"ஒரு நாளேட்டைக்கூட ஏன் ஹாங்காங்கால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை," என்றும் அவர் வினவினார்.
கடந்த வாரம் ஆப்பிள் டெய்லி அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த நூற்றுக்கணக்கான போலிசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதாகக் கூறி சோதனை நடத்தினர்.
முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை களில் சீனா, ஹாங்காங்குக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று பல நாடுகளைக் கேட்டுக் கொள்ளும் வகையில் இருந்தது என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மூத்த ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆப்பிள் டெய்லியின் நிறுவனர் ஜிம்மி லாய், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
இதற்கிடையே தைவானில் ஆப்பிள் டெய்லி நாளேடு தொடர்ந்து வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

