யூரோ 2020 'எஃப்' பிரிவு காற்பந்து ஆட்டத்தில் நேற்று போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு முறை கோல் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார். முன்னாள் ஈரானிய ஆட்டக்காரர் அலி டாயி 109 கோல்களுடன் ஆக அதிக அனைத்துலக கோல்களைப் புகுத்திய சாதனையாளர். நேற்றைய ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த கோல்கள் மூலம் தாமும் அச்சாதனைக்கு ஈடாக 109 அனைத்துலக கோல்இலக்கை அடைந்துவிட்டார்.
யூரோ 2020 காற்பந்துப் போட்டியின் ஓர் ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸுடன் சமநிலை கண்டு போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மற்றோர் 'எஃப்' பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனியும் ஹங்கேரியும் தரப்புக்கு இரண்டு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டன.
'எஃப்' பிரிவிலிருந்து ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய மூன்று காற்பந்து ஜாம்பவான்களும் போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.
நேற்று நடைபெற்ற 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில், ஸ்பெயின் 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
மற்றோர் 'இ' பிரிவு ஆட்டத்தில், சுவீடன் 3-2 என்ற கோல் கணக்கில் போலந்தை வென்றது.
'இ' பிரிவிலிருந்து சுவீடனும் ஸ்பெயினும் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.

