ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கொவிட்-19 டெல்டா வகைத் தொற்று பெருகிவருவதைத் தொடர்ந்து, கூடுதல் மருத்துவமனைகளுக்கும் மருத்துவப் படுக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
சுகாதார அமைச்சர் புடி குணாடி சடிக்கின் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். ஜகார்த்தாவின் முக்கிய மூன்று அரசாங்க மருத்துவமனைகள் கொவிட்-19 கிருமிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகளாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், தலைநகரில் அரசாங்கம் புதிதாகக் கட்டியிருக்கும் இரண்டு, பெரிய குடியிருப்பு வளாகங்கள், மெல்லிய நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ வளாகங்களாக மாற்றப்படும் என்றார் அமைச்சர்.
மூன்று அரசாங்க மருத்துவ மனைகளும் கொவிட்-19 சிகிச்சை வசதிகளாக மாற்றப்படுவதால் நூற்றுக்கணக்கான மருத்துவப் படுக்கைகள், அனைத்துவித சாதனங்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு, ஆகியவை கிடைக்கும் என்று திரு புடி குறிப்பிட்டார்.
அத்துடன், மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகள் கொவிட்-19 சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை களுக்கு வெளியே அமைக்கப்படும் கூடாரங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்
தற்போது இந்தோனீசியா முழுவதும் 85 ஆயிரம் படுக்கைகள் கிருமித் தொற்று கண்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவற்றில் 60,000 படுக்கைகளில் ஆட்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் திரு புடி தெரிவித்தார்.
இந்தோனீசியாவில் கடந்த திங்கட்கிழமை வரை 2 மில்லியன் பேருக்கு கிருமித்தொற்று கண்டுள்ளது. இந்த வாரத்தில் மூன்று நாள்களில் முன் எப்போதும் இல்லாத அளவை தொற்று தொட்டது.
நேற்று முன்தினம் அங்கு புதிதாக 20,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

