மயாமி: மயாமியில் கடந்த வியாழன் அன்று 12 மாடி கொண்டோ வீட்டுக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் உயிர்பிழைத்தவர்களை அவசரமாகத் தேடி வருகின்றனர். குறைந்தது மூன்று பேர் அச்சம்பவத்தில் உயிர் இழந்ததாகக் கருதப்பபடுகிறது. மேலும் 99 பேரை இன்னும் காணவில்லை. மாண்டோர் எண்ணிக்கை வெகுவாக உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை 35 பேரை தீயணைப்பு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் புகுந்து ஒவ்வொரு மாடியிலும் சிக்கியிருப்போரை நேற்று மீட்புப் பணியாளர்கள் தேடி வந்தனர். சிலருடன் பேச முடிந்ததாகவும் அவர் களைக் காப்பாற்ற வழிகண்டு வருவதாகவும் ஃபுளோரிடா மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார். ஆனால் கட்டட இடிபாடுகள் நிலையற்று இருப்பதால் அப்பணி மெதுவாக நடைபெற்று வருகிறது.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டடத்தில் 136 வீடுகள் இருந்தன. அவற்றில் பாதி இடிந்து விழுந்தன. அவை இடிந்து விழுந்தது "எறி படைத் தாக்கியது போல இருந்தது" என்று உயிர் தப்பியவர்கள் கூறினர்.
அச்சம்பவத்தால் புளோரிடாவில் நெருக்கடி நிலையை அறிவித்து, மத்திய அரசாங்கத்தின் உதவிக்கும் உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

