ஜகார்த்தா: இந்தோனீசியா அதன் ஆக மோசமான
கொவிட்-19 அன்றாட நிலையை நேற்று பதிவு செய்தது. நேற்று மேலும் 21,342 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக இந்தோனீசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
இதன்மூலம் நேற்று முன்தின நிலவரப்படி இந்தோனீசியாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,115,304ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக இந்தோனீசியாவில் நேற்று 409 மாண்டனர். கிருமித்தொற்று காரணமாக இந்தோனீசியாவில் இதுவரை 57,138 பேர் மாண்டுவிட்டனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனீசியாவில்தான் ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அது
மட்டுமல்லாது, ஆக அதிகமான மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் தினமும் இரண்டு மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட இந்தோனீசியா இலக்கு கொண்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.
இம்மாதம் தினமும் 700,000 பேருக்குத் தடுப்பூசி போட இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
அடுத்த மாதம் தினமும் ஒரு மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட தேவையான ஏற்பாடுகளை அது எடுத்து வந்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தினமும் இரண்டு மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட இந்தோனீசிய அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு அங்கு நிலைமை கவலைக்கிடமாக இருப்பதைக் காட்டுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த மாதம் நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு இந்தோனீசியாவில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்திருப்பதாகவும் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்றும் அதிபர் விடோடோ கூறினார்.
டெல்டா, ஆல்ஃபா, பேட்டா போன்ற உருமாறிய கொவிட்-19 கிருமி வகைகளால் கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர் விடோடோ தெரிவித்தார்.
நேற்று முன்தின நிலவரப்படி இந்தோனீசியா இதுவரை 25.48 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுள்ளது. அவற்றில் 12.91 மில்லியன் தடுப்பூசிகள் இரண்டாவது முறை தடுப்பூசிகளாகும்.

