லண்டன்: ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது.
ஆனால் காலிறுதியில் இடம் கிடைக்க ஆஸ்திரியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அது கடுமையாகப் போராட வேண்டி இருந்தது.
முதல் சுற்று ஆட்டத்தில் இத்தாலி அதன் மூன்று ஆட்டங்களிலும் வெற்றிக் கனியைப் பறித்தது.
இம்முறையும் அது எளிதில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரியா விடுவதாக இல்லை.
குறிப்பாக, ஆட்டத்தின் பிற்பாதியில் ஆஸ்திரியா ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி இத்தாலியைத் திணறடித்தது.
ஆஸ்திரியாவின் மார்க்கோ அர்னாவ்டோவிச் தலையால் முட்டிய பந்து இத்தாலி கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது.
இத்துடன் இத்தாலியின் பயணம் முடிந்துவிடும் என்று பலர் கருதியபோது ஆஃப்சைட் காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. கூடுதல் நேரத்தில் இத்தாலி இரண்டு கோல்களைப் போட்டு முன்னிலை வகித்தது.
ஆட்டம் முடிவதற்கு முன்பு ஆஸ்திரியா ஒரு கோல் போட்டது.
இறுதியில் இத்தாலி 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இத்தாலி தொடர்ச்சியாக 31 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் உள்ளது.

