சிட்னி: தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மேலும் ஒரு வாரத்திற்கு முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வகை கிருமித்தொற்று பரவ தொடங்கியதையடுத்து கடந்த ஜூன் 26ஆம் தேதி இரண்டு வார காலத்திற்கு கடுமையான முடக்க நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளையோடு அது முடிவுக்கு வரவிருந்த நிலையில், தற்போது ஜூலை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மாணவர்கள் இணையம் வழி கற்றலில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சிட்னி மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று அங்கு 27 பேர் புதிய தொற்றுக்கு ஆளாகினர். இவர்களில் 7 பேர் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றனர் அதிகாரிகள்.
முதலில், வெளிநாட்டு விமான பணிக் குழுவினரை தனது வாகனத்தில் அழைத்துச் சென்ற ஓட்டுநருக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அங்கு 350 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

