லண்டன்: ஆட்டத்தைச் சமன் செய்த ஸ்பெயினை பெனால்டி முறையில் வீழ்த்தி யூரோ காற்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இத்தாலி.
60வது நிமிடத்தில்தான் ஆட்டத்தின் முதல் கோலே விழுந்தது.
இத்தாலி வீரர் கியேசா போட்ட அந்த கோலால், அக்குழு இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும் என்று தோன்றியது.
ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட வேண்டும் என்ற துடிப்போடு இருந்த ஸ்பெயின் நிர்வாகி, அல்வரோ மொராட்டாவை மாற்று ஆட்டக்காரராக களமிறக்கினார். அதற்கு பலனும் கிடைத்தது. ஆனாலும் ஸ்பெயினுக்கு என்னவோ அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இத்தாலியின் கோலை 80வது நிமிடத்தில் மொராட்டா சமன் செய்தார். ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிந்தது.
எனவே வெற்றி, தோல்வியை முடிவு செய்ய பெனால்டி முறை நடத்தப்பட்டது. அப்போது மொராட்டா கோல் போட தவறிவிட்டது ஸ்பெயினின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது.
அதே சமயம் ஸ்பெயின் கோல்காப்பாளர் உனாய் சைமனைத் தாண்டி இத்தாலியின் ஜோர்கின்யோ பந்தை வலைக்குள் அனுப்பியதால் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி நான்காவது முறையாக யூரோ காற்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வரும் திங்கட்கிழமை வெம்பிளிவில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

