சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு சமூக அளவிலான கொவிட்-19 பாதிப்பு நேற்று அதிகரித்தது.
நேற்றைய நிலவரப்படி மேலும் 50 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் 44
பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உருமாறிய கொவிட்-19 கிருமி வகைகளில் ஒன்றான டெல்டா கிருமி வகையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 489ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரம் சிட்னியில் மூன்று வார முடக்கநிலை நடப்பில் உள்ளது.
இருப்பினும், அங்கு கொவிட்-19 நெருக்கடிநிலை மோசமடையக்
கூடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என நேற்று உறுதி செய்யப்பட்ட 50 பேரில் 26 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது பலருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மேலும் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
சிட்னியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முடக்கநிலை
நீட்டிக்கப்படக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

