சிட்னி: கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்ந்து மோசமடைவதையொட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முடக்கநிலை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தொடர்ந்து இந்த ஆண்டில் இதுவரை காணாத அளவில் புதிதாக கொவிட்-19 தொற்றியோரின் எண்ணிக்கை பதிவாகிவருகிறது.
கொவிட்-19 டெல்டா வகை கிருமிப் பரவல் அதற்குக் காரணம். எனினும், சமூக அளவில் புதிதாக கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் குறைந்தது.
அது, நம்பிக்கை அளிக்கும் ஓர் அம்சம் எனக் கருதப்படுகிறது. வரும் நாட்களில் பதிவாகும் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு முடக்கநிலையை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதலமைச்சர் கிளேடிஸ் பெரேஜிக்லியேன் குறிப்பிட்டார்.
சிட்னியில் தற்போதைய முடக்கநிலை வரும் வெள்ளிக்கிழமை வரை நடப்பில் இருக்கும். அதன்படிபள்ளிகள் மூடப்பட்டுள்ளன, வீட்டில் இருக்கும்படி பலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால் பொருளியல் மந்தமடையக்கூடும் என்ற அச்சம் நிலவியுள்ளது.
பல வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியா கொவிட்-19 சூழலை ஓரளவு நன்கு கையாண்டுள்ளது. எனினும், அந்நாட்டில் போதுமானோருக்குத் தடுப்பூசிகள் போடப்படவில்லை என்றும் குறைகூறப்படுகிறது.

