லண்டன்: முன்னாள் காற்பந்து வீரர்கள், கவனிப்பாளர்கள் உள்ளிட்டோரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக யூரோ 2020 கிண்ணத்தை வென்றுள்ளது இத்தாலி.
கடந்த உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறாமல் போன இத்தாலிய அணி, மூன்றே ஆண்டுகளில் காற்பந்து உலகை மீண்டும் தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில், அதிலும் குறிப்பாகக் கடந்த 50 நாட்களில், தனது அணியின் கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்ததை நினைத்து இறுதியாட்டம் முடிந்தவுடன் தான் ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக இத்தாலியின் பயிற்றுவிப்பாளர் ரோபர்ட்டோ மன்சினி தெரிவித்தார்.
விளையாட்டாளர்களிடையே வளர்ந்துள்ள குழு உணர்வு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் பெருமைப்பட்டார்.
இறுதியாட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. கூடுதல் நேரத்தின் முடிவில் பெனால்டிகளில் இத்தாலி இங்கிலாந்தை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்தின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், ஜேடன் சாஞ்சோ, புக்காயோ சாக்கா ஆகியோர் பெனால்டிகளை கோலாக்கத் தவறினர்.
விளையாட்டாளர்களைக் குறைசொல்லக்கூடாது, பெனால்டிகளை யார் எடுப்பது என்ற முடிவு தன்னுடையது, அது தான் செய்த தவறு என்று இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் கூறினார். வெற்றி, தோல்வி இரண்டையும் குழுவாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
19 வயதான சாக்காவை இங்கிலாந்தின் ஐந்தாவது பெனால்டியை எடுக்கச் சொன்னது அணியின் மூத்த விளையாட்டாளர்கள் சிலரின் தவறு என்று மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் அணித் தலைவர் ரோய் கீன் கூறினார்.
இங்கிலாந்திடம் சிறந்த முன்னிலை விளையாட்டாளர்கள் இருப்பதால் வருங்காலத்தில் முன்னிலை ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, எதிரணியைத் திக்குமுக்காடச் செய்வதில் அணி அக்கறை காட்டலாம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கேரி லினெக்கர் கருத்துரைத்தார்.
இறுதியாட்டத்தில் தோல்வியுற்றாலும் இங்கிலாந்து இந்தப் போட்டியில் சிறப்பாகச் செய்ததைப் பல தரப்பினர் சுட்டினர்.
பெனால்டிகளை கோலாக்கத் தவறியதைத் தொடர்ந்து ரேஷ்ஃபர்ட், சாஞ்சோ, சாக்கா மூவரும் இணையம்வழி இன ரீதியாகத் தூற்றப்பட்டனர். இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் அதை வன்மையாகக் கண்டித்தது. அணியைப் பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அந்தச் செயலைக் கண்டித்துப் பேசினார்.
மேலும், ஆட்டம் அரங்கேறிய வெம்பிளி விளையாட்டரங்கிற்குள் சில ரசிகர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
ரசிகர்களுக்கிடையே வன்முறை வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது. 55 ஆண்டுகளில் முதன்முறையாக அனைத்துலகப் போட்டி ஒன்றின் இறுதியாட்டத்திற்குச் சென்ற இங்கிலாந்து, கிண்ணத்தை வெல்லுமா என்பதுதான் அதிகம் பேசப்பட்டது. கிண்ணத்தை வென்றதோ 53 ஆண்டுகளாக யூரோ கிண்ணத்தை வெல்லாதிருந்த இத்தாலி.
யூரோ 2020 வெற்றியின் மூலம் 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட துயரம் மறைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறந்துள்ளது உத்தேவகத்துடன் விளையாடிய இத்தாலிக்கு!

