நஸ்ஸிரியா (ஈராக்): ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள நஸ்ஸிரியா நகரத்தில் உள்ள கொரோனா தொற்று மருத்துவமனையில் நேற்று தீ பற்றியது. உயிர்வாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில் 44 பேர் பலியாயினர். கிட்டத்தட்ட 22 பேர் தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை நஸ்ஸிரியா நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் போலிஸ் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
புகையால் சூழப்பட்ட அந்த மருத்துவமனைக் கட்டடத்தில் மேலும் உடல்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டு பிரதமர் முஸ்தபா அல்-கதிமி அந்நாட்டு அமைச்சர்களுடன் அவசரச் சந்திப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி இந்தத் துயரச்சம்பவத்திற்கான காரணம் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை நிர்வாகி, பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும் இன்னும் புகை மண்டலமாகக் காட்சி தரும் அங்கு சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் மற்றும் வர்த்தகத் தடை போன்றவற்றால் ஈராக் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையிடம் போதுமான வசதிகள் இல்லை. ஈராக்கில் தொற்றுப் பாதிப்புக்கு இதுவரை 17,592 பேர் பலியாகிவிட்டனர். 1.4 மில்லியன் பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

