லண்டன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த யூரோ 2020 இறுதிக் காற்பந்துப்போட்டியில் யூரோ கிண்ணத்தை இத்தாலி வென்றதையடுத்து, ஆட்டம் நடைபெற்ற வெம்பிளி விளையாட்டரங்கிற்குள் காற்பந்து ரசிகர்கள் சிலர் அத்துமீறி நுழைந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். அதேபோல் விளையாட்டரங்கிற்கு வெளியேயும் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு இங்கிலாந்து காற்பந்துச் சங்கமும் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், காற்பந்து தொடர்பாக காற்பந்து ரசிகர்கள் இங்கிலாந்து காற்பந்து வீரர்கள் குறித்து இனரீதியான கருத்துகளைத் தெரிவித்தால் அது உடனடியாக நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மார்கஸ் ரேஷ்ஃபர்ட், ஜேடோன் சஞ்சோ மற்றும் புகாயோ சாகா ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள்தான் பெனால்டிகளை கோலாக்கத் தவறினர் என்று அவர்களை இனரீதியாக இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் ரசிகர்கள் தூற்றினர்.
அதனையடுத்து சமூக ஊடகங்கள், இனரீதியாகச் சாடும் கருத்துகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று எச்சரித்துள்ளன. இனரீதியான கருத்துகளுக்கு டுவிட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இடமில்லை என்று அந்த ஊடகங்களின் சான் பிரான்சிஸ்கோவுக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார். தானியங்கி மென்பொருளின் உதவியுடன் கடந்த 24 மணி நேரத்தில் டுவிட்டரில் பதிவிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனரீதியாகச் சாடும் கருத்துகளைக் கொண்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதுபோன்ற கருத்துகளை பதிவிட்ட பலரின் கணக்குகள் நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

