லண்டன்: இனவாதக் கருத்துகளை எதிர்கொள்வது தனக்கு புதிதல்ல என்று கூறியுள்ளார் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜேடன் சான்சோ.
யூரோ காற்பந்துத் தொடரில் இத்தாலிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தான் கோல் போட தவறியதற்கு சான்சோ மன்னிப்பு கேட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீது இணயத்தில் இனவாத கருத்துகள் கூறப்பட்டது குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யூரோ காற்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்ற பிறகு மூன்று கறுப்பின விளையாட்டாளர்களைக் குறிவைத்து இணையத்தில் இனவாத கருத்துகள் கூறப்பட்டன.
"நானும் எனது சகோதரர்களான மார்கஸ், புக்காயோவும் இதுவரை இனவாத கருத்துகளை எதிர்கொண்டதில்லை என்பது போல் நடிக்க போவதில்லை. இது ஒன்றும் புதிதல்ல.
"வெறுப்பால் எதையும் வெல்ல முடியாது. இதுபோன்ற இனவாத கருத்துகளை எதிர்கொண்ட இளம் வயதினர், நிமிர்ந்து நின்று தங்கள் கனவை நோக்கி ஓடவேண்டும்," என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

