மேற்கு ஐரோப்பிய நாடுகளை மிரட்டும் கனமழை, வெள்ளம்
பெர்லின்: கடந்த பல பத்தாண்டுகளில் கண்டிராத ஆக மோசமான வெள்ளம் காரணமாக ஜெர்மனியில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்; குறைந்தது 1,300 பேரைக் காணவில்லை.
மேற்கு ஐரோப்பாவில் பெருமழை பெய்து வருவதால் ஆறுகள் கரைகளை உடைத்துக்கொண்டு ஓடி, பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன.
கனமழையாலும் வெள்ளத்தாலும் பெல்ஜியத்திலும் 22 பேர் மாண்டுவிட்டதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டோர்க்கு முழு ஆதரவு வழங்க ஜெர்மானிய பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உறுதியளித்துள்ளார். அவர் அதிகாரபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட அர்வெய்லர் மாவட்டத்தில், ஷுல்டு எனும் சிற்றூரில் ஆறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன; பல வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன.
ஆயிரக்கணக்கானோரின் நிலை தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 15,000 காவல்துறையினர், படைவீரர்கள், அவசரகால சேவைப் பணியாளர்கள் தேடி, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூரைகளில் தஞ்சமடைந்தோர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர்.
பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகரமான லீஜில் இருந்து மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நகரின் ஊடாக ஓடும் மேஸ் ஆற்றில் நீர்மட்டம் 1.5 மீட்டர்வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள ஒர் அணையும் உடையக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுவதால், மக்கள் ஒருவருக்கொருவர் உதவும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தின் வல்கென்பர்க் நகரின் மையப் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அவ்விடத்தில் அமைந்துள்ள பல தாதிமை இல்லங்களில் இருப்போர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அந்நாட்டில் இதுவரை வெள்ளத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், மேஸ் ஆற்றின் ஓரமாக அமைந்துள்ள நகரங்களில், சிற்றூர்களில் இருந்து மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

