சென்னை: சென்னை, கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலிசுக்கு மாற்றப்பட்டது.
மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் அவர் மீது பாய்ந்துள்ளது. சிவசங்கர் பாபாவின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியைகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆசிரியைகள் சிலர் சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர்.
அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கேளம்பாக்கம் பழனிகார்டன் பகுதியில் உள்ள 5 ஆசிரியைகளுக்கு நேரில் சம்மன் கொடுக்க சிபிசிஐடி போலிசார், அந்த ஆசிரியைகளின் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால் அந்த ஐந்து பேரும் தங்கள் வீடுகளில் இல்லை. தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியைகளின் வீட்டுக்கதவில் சம்மனை போலிசார் ஒட்டினர்.
தலைமறைமானவர்களை போலிசார் தேடி வருகின்றனர். ஐந்து ஆசிரியைகளும் சிவசங்கர் பாபா குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துகளை நீங்கள் தெரிவித்தீர்கள் என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காகவே போலிசார் சம்மனை வழங்க நேரில் சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.
இருப்பினும் 5 பேரையும் கண்டுபிடித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.
வருகிற திங்கட்கிழமை முதல் ஐந்து ஆசிரியைகளையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலிசார் திட்டமிட்டு இருந்தனர். இதுபோன்ற ஒரு சூழலில்தான் ஆசிரியைகள் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர்.
ஆசிரியைகளிடம் விசாரித்த பின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.