பேங்காக்: தாய்லாந்தில் பொது இடங்களில் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் ஒரு சில நகரங்களில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே நடப்பில் இருந்தாலும், தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பும் நேற்று ஆக அதிகளவில் பதிவானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று அங்கு 10,082 பேர் தொற்றுக்கு ஆளாகினர், 141 பேர் மாண்டுவிட்டனர்.
பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கான தடையை மீறு
வோருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது 40,000 பாட் வரை (S$1,655) அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படக்
கூடும் என்று வெள்ளிக்கிழமையன்று வெளியான அரசாங்க அறிவிப்பு கூறுகிறது.
தொற்று பரவக்கூடிய அதிக அபாயமுள்ள இடங்களில் சென்ற திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுவிட்டன. அவ்விடங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
"வேகமாக பரவக்கூடிய ஆல்பா, டெல்டா வகை
கொவிட்-19 தொற்றால் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து
கிருமிப் பரவல் மோசமடைந்து வருகிறது.
"எனவே, கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
"மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்படக்கூடும்," என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
"நிலைமை ஆராயப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்," என்று கொவிட்-19 பணிக்குழுவின் பேச்சாளரும் சொன்னார்.

