யங்கூன்: ராணுவ ஆட்சிக்குழுவினரின் கட்டுப்பாட்டில் இயங்கும் மியன்மாரில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் ஊழியர்கள் இல்லை. மருத்துவமனைகள் யாவும் செயலிழந்தநிலையில் காணப்படுகின்றன.
எனவே, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்றி வீடுகளில் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு தொற்றுப் பாதிப்பால் மாண்டவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு தொண்டுழியர்கள் வீடு வீடாகச் சென்று உடல்களைப் பெற்றுவருகின்றனர்.
தொண்டூழியர்களில் ஒருவரான குமாரி தான் தான் சோ, "ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எனக்கு அழைப்பு வந்துவிடும். தொற்றுப் பாதிப்பால் மாண்டவர்களின் உறவினர்கள் அழைப்பார்கள். அவர்களிடம் மாண்டவர்களின் விவரத்தைக் கேட்டு எழுதிக்கொண்டு அவ்விடத்திற்கு எங்கள் குழுவை அனுப்பிவைப்பேன்.
"இந்தச் சேவையை நாங்கள் ஓய்வின்றி செய்துவருகிறோம். ஒவ்வொரு நாளும் எங்கள் குழு 30 முதல் 40 உடல்களைப் பெற்று வருகிறது. இங்கு இயங்கும் மற்ற தொண்டூழியக் குழுக்களும் எங்களைப்போலவே சேவையாற்றி வருகின்றனர். சில சமயங்களில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு உடல்களைப் பெறும் துயரச் சம்பவங்களும் நடப்பதுண்டு," என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

