இங்கிலாந்து: பிரிட்டிஷ் எஃப்1 விரைவு கார் பந்தய விருதை சாதனை அளவாக எட்டாவது முறையாகக் கைப்பற்றிய 36 வயது பிரிட்டனின் லுயிஸ் ஹேமில்டன், இணையத்தில் இனவாதத் தாக்குதலுக்கு ஆளானார்.
ஒட்டுமொத்தமாக எஃப்1 விருதை ஏழு முறை வென்றுள்ள ஹெமில்டன், நேற்று முன்தினம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் நகரில் நடைபெற்ற பந்தயத்தின் முதல் சுற்றிலேயே புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ள நெதர்லாந்தின் மெக்ஸ் வெஸ்டப்பனின் கார், ஹேமில்டனின் காருடன் மோதி, பந்தயத்திலிருந்து விலகியது. அந்த மோதலில் காயமுற்ற வெஸ்டப்பன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடக்கக் கோட்டில் இரண்டாவது நிலையில் போட்டியைத் தொடங்கிய ஹேமில்டன் முதல் நிலையில் தொடங்கிய வெஸ்டப்பனின் காரை முந்த பல முறை முயன்றார்.
அதில் வெஸ்டப்பன், ஹேமில்டன் காரின் முன் சக்கரத்தை மோதி, தடம் மாறி, பாதுகாப்பு சுவர்கள் மீது மோதினார். அதன் காரணமாக பந்தயம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, ஹேமில்டனுக்கு கூடுதல் பத்து வினாடி தண்டனை கொடுக்கப்பட்டது.
அப்படி இருந்தும் பந்தயத்தின் முதல் நிலையில் இருந்த மொனாக்கோவின் சார்ல்ஸ் லெக்ரெக்கை முந்திச் சென்று பந்தயத்தை முடித்து வெற்றியாளரானார்.
"ஹேமில்டன் ஒரு போட்டியாளரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறுக்கு வழியில் பெற்ற வெற்றி," என்று வெஸ்ட்டப்பன் ஓட்டிய ரெட் புல் பந்தய நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டியன் ஹோர்னர் சாடினார்.
பந்தயம் முடிந்து சில மணி நேரத்தில் இணையத்தில் ஹேமில்டனுக்கு எதிராக இனவாதத் தாக்குதல் தொடர்பில் கருத்துகள் வலம் வந்தன.
இது குறித்து பேசிய ஃபேஸ்புக்கின் பேச்சாளர், "ஹேமில்டனுக்கு எதிரான இனவாதத் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்தக் கருத்துகளை நாங்கள் ஃபேஸ்புக்கிலிருந்தும் இன்ஸ்ட கிராமிலிருந்தும் அகற்றி விட்டோம்," என்றார்.

