ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், பெருமளவில் மக்கள் கூடுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட பெருமளவில் ஒன்றுகூடிய இந்தோனீசிய மக்கள் பள்ளிவாசல்
களுக்கு வெளியே தொழுகையில் ஈடுபட்டனர்.
பாரம்பரிய நிகழ்வுகள் உட்பட பெரியளவில் கூடுவதற்குத் தடை விதித்துள்ள அதிகாரிகள், சமய வழிபாட்டுச் செயல்களுக்காகவும் ஒன்றுகூட வேண்டாம் என மக்களிடம் வலியுறுத்தினர்.
மற்றவர், சமூக நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்திய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, வீட்டிலேயே தொழுகையில் ஈடுபடுமாறு தன் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
தலைநகர் ஜகார்த்தாவிலும் வேறு சில இடங்களிலும் இந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த சிலர், அருகிலுள்ள சாலைகளில் தொழுகைக்காக ஒன்றுகூடினர்.
ஆனால் பண்டார் அச்சேயில்
பைதுர்ரஹ்மான் கிராண்ட் பள்ளிவாசலுக்கு வெளியே குறுகிய இடத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடினர்.
சென்ற மே மாதம் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளின்போது இந்தோனீசியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பியதைத்தொடர்ந்து, அங்கு கிருமிப் பரவல் பெருமளவு அதிகரித்தது.
தற்போது இந்தோனீசியாவில் நாளொன்றுக்கு 50,000த்திற்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. ஜூன் மாத தொடக்கத்தில் இருந்ததைவிட இது 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் பல மருத்துவமனைகள் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் இரவு முழுவதும் வேலை செய்தாலும் கல்லறைகளில் குவியும் சடலங்களைக் கையாள முடியாமல் பணியாளர்கள் திணறுவதால், தொண்டூழியர்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

