கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று 424,936 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர்களில் 282,106 பேர் முதல் முறையாகவும் 142,830 பேர் இரண்டாவது முறையாகவும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டார்கள் என்று தடுப்பூசிக்கான சிறப்புக் குழு தெரிவித்தது.
வரும் அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ள மலேசியா, தடுப்பூசி விகிதத்தை நாளொன்றுக்கு அரை மில்லியனாக அதிகரிப்பதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.
இதுவரை 10.09 மில்லியன் பேர் முதல் முறையும் 4.64 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளதாகவும் சிறப்புக் குழுவின் டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
பெரியவர்கள் மக்கட்தொகையில் 30.9 விழுக்காட்டினர் முதல் முறையும் 14.3 விழுக்காட்டினர் முழுமையாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
மலேசியாவிலேயே லபூவானில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதன் மக்கட்தொகையில் 60 விழுக்காட்டினர் முதல் முறையும் 44.4 விழுக்காட்டினர் முழுமையாகவும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, மருத்துவ தரவுகளின் அடிப்படையில் ஃபைசர், சினோவேக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டவை என்று கூறியுள்ளார் சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா.
சிலியில் சினோவேக் தடுப்பூசி போடப்பட்ட 4.2 மில்லியன் பேரிடமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 5.5 மில்லியன் பேரிடமும் நடத்தப்பட்ட ஆய்வு தரவுகள் இவ்வாறு கூறுவதாக அவர் சொன்னார்.
ஃபைசர் 95% திறன்மிக்கது என்று கூறப்படுவது சிறிய குழுவான 170 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு தரவுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
மலேசியாவில் நேற்று 12,366 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட்டுள்ள மலேசியா

