யங்கூன்: ராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில் இவ்வாண்டு இறுதிக்குள் அதன் மக்கட்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அதன் சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை ஆக அதிகமாக பதிவானதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
சுமார் 54 மில்லியன் மக்கட்தொகை கொண்ட மியன்மாரில், இதுவரை வெறும் 1.6 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகமான குளோபல் நியூ லைட் கூறுகிறது.
ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசிகள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்
படுவதாகவும் அது கூறுகிறது.
சுமார் 750,000 சீன தடுப்பூசிகள் நாளை மியன்மார் சென்று சேரும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் அதிக தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மியன்மாரின் 20 விழுக்காட்டு மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐநா கூறுகிறது.
மியன்மாரில் திங்கட்கிழமைஅன்று 5,189 பேர் தொற்றுக்கு ஆளாகினர், 281 பேர் தொற்றால் பலியாகினர்.
ஆனால் சடலங்களைக் கையாள முடியாமல் தகனச்சாலைகள் திணறி வருவதாக கூறும் இறுதிச் சடங்கு நடத்தும் சேவையாளர்கள், உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இதற்கிடையே, மியன்மாரில் இருந்து சீனாவின் யூனான் மாநிலத்திற்குத் திரும்புபவர்களால், சீனாவில் ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று ஆக அதிக எண்ணிக்கையில் தொற்று சம்பவங்கள் பதிவானது.

