ஐரோப்பாவில் 50 மில்லியன் பேர் பாதிப்பு
பெர்லின்: உலகளவில் 50 மில்லியன் கொரோனா தொற்றுச் சம்பவங்களைக் கடந்த முதல் வட்டாரமாக ஐரோப்பா உருவெடுத்துள்ளது. ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரங்களின் அடிப் படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் 1.3 மில்லியன் பேர் கிருமித்தொற்று காரணமாக மாண்டு விட்டனர். வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கிருமித் தொற்றே, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் முடக்கநிலை வரக்கூடும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
சத்தம் போட்டவருக்குக் கத்திக் குத்து
ஜோகூர் பாரு: சத்தம் போட்ட அண்டைவீட்டுக்காரரைக் கத்தியால் குத்திய சம்பவம் மலேசியாவின் தாமான் பெர்மாஸ் ஜெயாவில் நடந்தது. தன் வீட்டில் இருந்தவர்களுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்த 50 வயது அண்டைவீட்டுக்காரர் மிகவும் சத்தம் போட்டதால், கோபமடைந்த 40 வயது ஆடவர், அவரை வயிற்றில் கத்தியால் குத்திவிட்டார். இதையடுத்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு நான்கு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரின் நிலைமை சீராக உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
ஆங் சான் சூச்சியின் நம்பிக்கைக்கு உரியவர் கிருமித்தொற்றால் மரணம்
யங்கூன்: பதவி நீக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியின் நம்பிக்கைக்குரியவரும் தேசிய லீக் கட்சியின் முன்னாள் செய்தித்தொடர்பாளருமான நியான் வின், 78, என்பவர் ராணுவப் படையினரால் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட்-19 கிருமித்தொற்றால் மாண்டுவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜூலை 11ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
வெள்ள நீரில் தத்தளிக்கும் ஹெய்னான்
பெய்ஜிங்: மத்திய சீன மாநிலமான ஹெய்னானில் பெய்த வழக்கத்துக்கு மாறான கனமழையால் முக்கிய நதிகளில் வெள்ளம் கரை கடந்து ஓடியது. இதனால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற ஷாலின் கோயில் மூடப்பட்டது.
பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்துகளும் தடைப் பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி
உள்ளது. இதுவரை எந்த உயிர் சேதமும் இல்லை. இன்னோர் பக்கம் மின்சாரப் பற்றாக்குறை, அதிக மின்சாரத் தேவை ஆகியவற்றின் காரணமாக பெய்ஜிங், சியான் பகுதிகளில் திட்டமிட்ட மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசியாவில் நிரந்தரமாக பிரிட்டிஷ் கப்பல்
தோக்கியோ: அமெரிக்கா, அதன் நட்பு நாடான ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றத்திற்கு மத்தியில், குயின் எலிசபெத் விமானம் தாங்கி கப்பல் செப்டம்பர் மாதம் ஜப் பானுக்குச் சென்றபின், ஆசியாவில் இரண்டு போர்க்கப்பல் களை நிரந்தரமாக நிலைநிறுத்தப்போவதாக பிரிட்டன் கூறியுள்ளது. தோக்கியோவுடனான பாதுகாப்பு உறவுகளை லண்டன் பலப்படுத்தும் வகையில் அந்தக் கப்பல் ஜப்பானுக்கு அனுப்பப்படுகிறது.

