கோலாலம்பூர்: மலேசியாவில் தொடரும் முடக்கநிலையால் வசதி குறைந்தோர் மட்டுமல்லாது, மற்றவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வசதி குறைந் தோருக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணியில் 'பார் ரோக்கா' எனும் உணவகம் ஈடுபட்டு வருகிறது.
"முடக்கநிலை காரணமாக மலேசியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக எங்கள் ஊழியர்களை எங்களால் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்ய தேவையான வளங்கள் எங்களிடம் உள்ளன," என்று 'பார் ரோக்கா' உணவகத்தின் இயக்குநர் திரு மார்டின் ஜேக்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்துக்கு மூலகாரணம் திரு ஜேக்ஸின் மனைவி திருவாட்டி எனி மேத்யூஸ். தற்போது செயல்படாமல் இருக்கும் உணவகத்தை மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் சேகரிக்கும் இடங்களாக அவர்கள் மாற்றியுள்ளனர்.
'பார் ரோக்கா'வுக்கு அடிக்கடி செல்லும் வாடிக்கையாளர்களும் மற்றவர்களும் வழங்கிய நன்கொடையைப் பயன்படுத்தி மளிகைப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் திரு ஜேக்சும் அவரது மனைவியும் வாங்குகின்றனர்.
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தலைநகர் கோலாலம்பூரில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நன்கொடை வழங்கப்படும் மளிகைப் பொருட்
களையும் அத்தியாவசியப் பொருட்
களையும் 'பார் ரோக்கா' ஊழியர்கள் வசதி குறைந்த குடும்பங்
களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
'பார் ரோக்கா' உணவகம் இதுவரை முடக்கநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 190க்கும் மேற்பட்ட பரிவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது.
மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் 'பார் ரோக்கா' உணவகத்தின் ஊழியர்கள். படம்: எனி மேத்யூஸ் ஜேக்ஸ்